﻿சங்.
147.
யெகோவாவை துதியுங்கள்; நம்முடைய தேவனைப் புகழ்ந்து பாடுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாக இருக்கிறது. 
யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். 
நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாக இருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. 
யெகோவா சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கர்களைத் தரைவரை தாழ்த்துகிறார். 
யெகோவாவை துதியுடன் பாடிக்கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் புகழ்ந்து பாடுங்கள். 
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைக்கச்செய்கிறார். 
அவர் மிருகங்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 
அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாக இருக்கமாட்டார்; வீரனுடைய கால்களில் பிரியப்படமாட்டார். 
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் யெகோவா பிரியமாக இருக்கிறார். 
எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி. 
அவர் உன்னுடைய வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 
அவர் உன்னுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக மாற்றி, செழிப்பான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 
அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா விரைவாக செல்லுகிறது. 
பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 
அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 
அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகச்செய்கிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 
யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 
அவர் வேறே எந்த தேசத்திற்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய கட்டளைகளை அறியாமற் போகிறார்கள். அல்லேலூயா. 
